12 ஆக., 2013

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ???

பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். “ஐந்து பழம் பத்து ரூபாய்” என்று கூறினார். யாரும் பழம் வாங்க முன்வரவில்லை. சிரமப்பட்டு கீழே இறங்கினார்.

அடுத்து, இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். “ஆறு பழம் பத்து ரூபாய்!” என்றான் அவனுக்கு நல்ல விற்பனை! மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும் “ஐந்து பழம் பத்து ரூபாய்!” என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே கீழே இறங்கிவிட்டார். அடுத்து, “ஆறு பழம் பத்து ரூபாய்!” என்று கூவியபடி அதே பேருந்தில் ஏறிய இளைஞன் ஏகத்துக்கும் விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகர் இந்தக் காட்சியைப் பார்த்தார். முதியவரை அழைத்து, “இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறுபழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனையாகும்!” என்றார்.

முதியவர் சிரித்தபடி சொன்னார்: “அவன் என் மகன்தான் இந்தப்பழமும் அவனதுதான், “ஆறு பழம் பத்து ரூபாய்” என்று விற்றால்.... சட்டென்று வாங்குவதற்கு நம்ம சனத்துக்கு மனசு வராது அதனால் நான் “ஐந்து பழம் பத்து ரூபாய் என்று கூறிவிட்டுப் போவேன். அப்புறமா, “ஆறு பழம் பத்து ரூபாய்” என்று அவன் வந்து சொன்னதும்...... அடடா லாபமா இருக்கேன்னு சனங்க சட்டென்று வாங்குவாங்க.” என்றார்.