15 செப்., 2017

வானம் பூமியின் முகடு (கூரை) - அல்குர்ஆன்



பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது –

வானத்தை "பாதுகாக்கப்பட்ட முகடு" என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

* உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக! (52:5)


* அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்! (2:22),


வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர். (21:32)


அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். உங்களுக்கு வடிவம் தந்தான். உங்கள் வடிவங்களை அழகுற அமைத்தான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன். (40:64)

கூரை, முகடு என்று கூறுவதாக இருந்தால் மேலிருந்து வரும் ஆபத்துகளையும் கடும் வெப்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். 

"நமக்கு மேல் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும் வானம் எப்படிக் கூரையாக முடியும்?" என்று சிலர் எண்ணலாம். 

நவீன ஆய்வுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் திருக்குர்ஆன் கூறுவது போல் வானம், பூமிக்குக் கூரையாக அமைந்துள்ள அதிசயத்தை அறிந்து கொள்ளலாம்.
வானம் என்பது என்ன?

வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும்.

வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53, 22:63, 23:18, 25:48, 27:60, 29:63, 30:24, 31:10, 35:27, 31:21, 43:11, 50:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இந்த வானத்தை நாம் எளிதில் அடைந்து விடலாம். விமானத்தில் பயணம் செய்பவர் இந்த வானத்துக்கும் மேலே அதாவது மழைபொழியும் மேகங்களுக்கும் மேலே பயணம் செய்ய முடியும். 

பறவைகள் வானத்தில் வட்டமடிக்கின்றன என்று குர்ஆன் சொல்வது வெட்ட வெளியைத்தான். 

விஞ்ஞானிகள் இந்த வானத்தையே திடப்பொருள் அல்ல எனவும் சூனியம் எனவும் கூறுகின்றனர். இதனால் தான் நாம் இதை விமானத்தின் மூலம் தடையில்லாமல் கடந்து செல்ல முடிகிறது. 

இது அல்லாத இன்னொரு வானத்தைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது. அது மனிதன் இன்னும் சென்றடையாத தொலைவில் இருக்கிறது. ஏழு அடுக்குகளைக் கொண்டதாக அது படைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
திருக்குர்ஆன் 41 : 12 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்னுலகப் பயணம் அழைத்துச் சென்றபோது அவர்கள் ஒவ்வொரு வானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அங்கே வானவர்களை திறக்கச் சொல்லி அதன் வாசல்கள் திறந்த பின்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல முடிந்தது. 

இவ்வாறு ஏழு வானங்கள் உள்ளன. இந்தவானத்தை விஞ்ஞானிகள் இன்னும் அறிவால் கூட அடையவில்லை. இவர்கள் ஆகாயம் எனும் வெட்ட வெளியின் இறுதி எல்லையைக் கூட அடையவில்லை. அது திடப்பொருள் என்றோ திரவப்பொருள் என்றோ இன்னும் அவர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை. 

எந்த வசனத்தில் எந்த வானம் பற்றி பேசப்படுகிறது என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம். 

மனிதனுடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி பேசும்போது வானம் என்பது வெட்டவெளி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

மனிதன் அறிந்திராத நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் குறித்து வானம் என்று சொல்லப்பட்டால் அது மனிதன் சென்றடையாத ஏழு அடுக்குகளைக் கொண்ட திடப்பொருளான வானம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  வானம் பாதுகாக்கப்பட்ட முகடு 

வானத்தை "பாதுகாக்கப்பட்ட முகடு" என்று இவ்வசனங்கள் (2:22, 21:32, 40:64, 52:5) கூறுகின்றன. 

கூரை, முகடு என்று கூறுவதாக இருந்தால் மேலிருந்து வரும் ஆபத்துகளையும், கடும் வெப்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். 

"நமக்கு மேல் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும் வானம் எப்படிக் கூரையாக முடியும்?" என்று சிலர் எண்ணலாம். 

நவீன ஆய்வுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் திருக்குர்ஆன் கூறுவது போல் வானம், பூமிக்குக் கூரையாக அமைந்துள்ள அதிசயத்தை அறிந்து கொள்ளலாம்.  

சந்திரனில் பகல் நேர வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடாக உள்ளது. சந்திரனுக்கு அருகிலுள்ள பூமியிலும் ஏறத்தாழ இதே அளவு வெப்பம் தான் இருக்க வேண்டும். ஆனால் சராசரியாக 40 டிகிரி அளவுக்குத்தான் பூமியில் வெப்பம் உள்ளது. இதற்குக் காரணம், நமக்கு மேலே உள்ள காற்றுக்கூரை தான். 

தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரை காற்றின் முதல் அடுக்கு உள்ளது. இது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்து, சூரியனின் வெப்பம் முழுமையாக பூமியைத் தாக்காமல் காக்கின்றது. 

இந்த அடுக்கில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு அதிகம் உள்ளதால் இது கூரை போல் செயல்படுகிறது. 

பூமியிலிருந்து 16. கி.மீ. முதல் 50 கி.மீ. வரை அடர்த்தி குறைவான, விமானம் பறப்பதற்கு ஏற்ற காற்று உள்ளது. 

இந்த இரண்டாம் அடுக்கில் பூமியிலிருந்து 20 முதல் 35 கி.மீ. வரை ஓசோன் படலம் உள்ளது. சூரியனிலிருந்து ஏழு வண்ணங்களில் கதிர்கள் வெளிப்படுகின்றன. அதில் புறஊதாக் கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்த உயிர்க் கொல்லியாகும். உயிரினங்களிலுள்ள அணுக்களை இக்கதிர் அழித்து விடும். 

தண்ணீரிலுள்ள கிருமிகளை அழிப்பதற்கு இந்தப் புறஊதாக் கதிர்களைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் உள்ளது. இந்தக் கதிர்கள், தண்ணீரிலுள்ள அனைத்துக் கிருமிகளையும் முற்றிலுமாக அழிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது. 

இத்தகைய சக்தி வாய்ந்த புறஊதாக் கதிர்கள், உயிரினங்கள் மீது பட்டு உயிரினங்கள் அழிந்து விடாத வகையில் ஓசோன் படலத்தால் தடுக்கப்படுகின்றது.
இந்த வகையிலும் வானம் கூரையாக அமைந்துள்ளது. 

பூமியிலிருந்து 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை நடுஅடுக்கு உள்ளது. விண்ணிலிருந்து அவ்வப்போது விண்கற்களும், வால்நட்சத்திரங்களும் மணிக்கு 43,000 முதல் 57,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வருகின்றன. 

இதில் சில கற்கள் 96,000 ச.மீ. பரப்பளவு கொண்டதாகும். இவ்வளவு பெரிய விண்கற்கள் சுமார் 50,000 கி.மீ. வேகத்தில் வந்து பூமியைத் தாக்கினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் சேதம் பூமியில் ஏற்படும். ஆனால் அப்படி நடக்காமல் சீறி வரும் விண்கற்களை இந்த நடுஅடுக்கு எரித்து, சாம்பலாக்கி விடுகின்றது. 

தப்பித் தவறி சிதறுண்டு விழும் விண்கற்களின் வேகமும் மட்டுப்படுத்தப்படுகிறது.
இந்த வகையிலும் வானம் கூரையாகச் செயல்படுகின்றது. 

பூமியிலிருந்து 80 கி.மீ. முதல் 1600 கி.மீ. வரை வெப்ப அடுக்கு உள்ளது. ஹீலியம், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் இங்கே அதிகம் உள்ளதால் இந்த அடுக்கு வெப்பப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒலி, ஒளி அலைகள் இங்கே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. 

இந்த வகையில் பூமியை விட்டு ஒலி, ஒளி அலைகள் வெளியேறாமல் தடுக்கும் கூரையாகவும் இது அமைந்துள்ளது. 

வானத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான தடுப்புகளை ஏற்படுத்தி விட்டுத்தான் வானத்தைக் கூரை என்று இறைவன் கூறுகிறான். 

திருக்குர்ஆன் இறைவனின் கூற்று என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாக உள்ளன.