அவ்விருவரையும்
அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து
அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப்
பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன'' என்றும் நாம் கூறினோம்.
(திருக்குர்ஆன் 2:36)
பூமியில்
உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம்.
குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்! (திருக்குர்ஆன் 7:10)
"(இங்கிருந்து)
இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில்
குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன'' என்று (இறைவன்) கூறினான். (திருக்குர்ஆன்
7:24)
"அதிலேயே
வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும்
கூறினான். (திருக்குர்ஆன் 7:25)
அவனது கட்டளைப்படி
வானமும், பூமியும் நிலைபெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை
ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள். (திருக்குர்ஆன்
30:25)
வானங்களிலும்,
பூமியிலும் இருப்போர் அவனுக்கே உரியவர்கள். அனைத்தும் அவனுக்கே கட்டுப்படுபவை. (திருக்குர்ஆன்
30:26)
மனிதர்கள்
பூமியில் தான் வாழ முடியும்
இவ்வசனங்களில் (2:36, 7:10,
7:24, 7:25, 30:25, 30:26) "இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும்'' என்ற கருத்து
கூறப்பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகில் அதன் துணைக்கோள்
சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும், பூமியின் துணைக்கோளான சந்திரனிலும் மனிதன் வாழமுடியாது
என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக்
கொள்வோம். சூரியனிலிருந்து 5,80,00,000 (ஐந்து கோடியே எண்பது லட்சம்) கி.மீ. தொலைவில்
உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.
முதலாவது இக்கோளில் காற்று இல்லை.
அடுத்து, இக்கோளின் அதிகபட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும், குறைந்தபட்ச வெப்பம்
180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்கள் தாங்கிக் கொள்ளத் தக்க
40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.
மேலும் பூமியின் ஈர்ப்பு விசையில்
மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.
வீனஸ் எனப்படும் வெள்ளிக்கோளை எடுத்துக்
கொண்டால் சூரியனிலிருந்து 10,08,00,000 (பத்து கோடியே எட்டு லட்சம்) கி.மீ. தொலைவில்
உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகபட்ச
வெப்பத்தைப் போல் சுமார் 10 மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான
ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும்
மனிதர்கள் வாழ முடியாது.
மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகத்திலும்
மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலைவிலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள
காற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகித அளவுக்குத்தான்
ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும், குறைந்தபட்ச வெப்பம்
மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது.
ஜூபிடர் எனும் வியாழன் கோள், சூரியனிலிருந்து
78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது.
மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை
இக்கோளில் இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.
சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து
142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ்
143 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே உள்ளது.
யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து
178 கோடி கி.மீ. தொலைவிலும், நெப்டியூன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும்,
புளூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில்
கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.
பூமியின் துணைக் கோளான சந்திரனிலும்
மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர், காற்று எதுவும் இங்கு இல்லை.
இங்கு பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும், இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும்
ஆகும்.
சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ.
தொலைவிலுள்ள பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.
சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த
தடயம் தென்படுகிறது என்று கூறப்பட்டாலும் அது நிரூபிக்கப்படவில்லை.
மனிதன் பூமியில்
மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.
மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு
வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது.
சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக்
கரிக் கட்டையாக்கி விடும்.
சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து
போகச் செய்து விடும்.
உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில்
தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில்
தங்குவதை 'வாழ்வது' என்று கூறக் கூடாது.
மேலும் பூமி மட்டுமே சூரியனிலிருந்து
23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது.
இப்படிச் சாய்வாகச் சுழல்வதால்தான் கோடை, குளிர்,
வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன.
வருடம் முழுவதும் ஒரே சீரான வெப்பமோ,
குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.
எழுதப் படிக்கத் தெரியாத நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்கு "இதில் தான் வாழ்வீர்கள்'' என்று எவ்வாறு அடித்துக்
கூற இயலும்?
எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற
முடியும்.
எனவே இதுவும் திருக்குர்ஆன், இறைவேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.
வேறு
கோள்களில் உயிரினங்கள்
பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன்
வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது விளக்கப்பட்டுள்ளது.
ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில்
மனிதனல்லாத உயிரினங்கள் இருக்க முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது
முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும் சில கோள்களில் தண்ணீர் இருந்ததற்கான சான்றுகள்
கிடைத்துள்ளதால் இவ்வாறு ஊகம் செய்கின்றனர்.
திருக்குர்ஆன் இந்தச் சாத்தியத்தை
மறுக்கவில்லை. மாறாக வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்க முடியும் என்று தெரிவிக்கிறது.
30:26. வானங்களிலும், பூமியிலும்
இருப்போர் அவனுக்கே உரியவர்கள். அனைத்தும் அவனுக்கே கட்டுப்படுபவை.
42:29. வானங்களையும், பூமியையும்
படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும், அவனது
சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும்போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்.
இவ்வசனம் வானத்திலும், பூமியிலும்
உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதாகக் கூறுகிறது.
பூமியைத் தவிர மற்ற கோள்களில் அல்லது
துணைக் கோள்களில் உயிரினம் இருக்கின்றன என்று நிரூபிக்கப்படாவிட்டாலும் உயிரினமான வானவர்கள்
வானுலகில் இருப்பதால் அதைக் குறிப்பதாக இவ்வசனத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மற்ற கோள்களில்
உயிரினம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் இவ்வசனம் அதையும் உள்ளடக்கிப் பேசியுள்ளது
என்று எடுத்துக் கொள்ள முடியும்.