குர்ஆனில் இவ்வசனங்களில்
(5:3, 5:4, 6:118, 6:11, 6:121, 11:69, 16:5, 16:14, 22:28, 22:36, 23:21,
35:12, 36:72, 40:79, 51:26) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று
அனுமதிக்கப்படுகிறது.
இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால்
கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும்
பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக்
கொள்ளலாம்.
உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர் வதை
என்றே காரணம் கூறுகின்றனர். உயிர் வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை
அவர்கள் தெளிவு படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
1. கால்நடைகளை விவசாயப்
பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துவது உயிர் வதையா?
இல்லையா?
2. கன்றுகளுக்காக தாய்ப் பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி
அருந்துவது உயிர் வதையா? இல்லையா?
3. இன்றைய அறிவியல் உலகில்
தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே! அப்படியானால் தாவரங்களையும், காய் கனிகளையும் உண்பது உயிர் வதை இல்லையா?
4. மனிதன்
அருந்துகின்ற தண்ணீரிலும் கோடிக் கணக்கான உயிர்கள் இருப்பது இன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர்
வதையா? இல்லையா?
5. கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது
சுய நலத்திற்காகக் கொல்வது உயிர் வதையா? இல்லையா?
உயிரினங்களை உட்கொள்ளக்
கூடாது என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர்
வதை இருக்கிறதே என்பதைச் சிந்திக்க வேண்டும்.அசைவம் சாப்பிடக் கூடாது
என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும்,
மீன்களையும் தவிர்ப்பது ஏன்?
மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப்
பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ
முடியுமா?இவ்வாறு தவிர்ப்பவர்கள் கண் பார்வை கூர்மையடைவதற்காக மீன்
எண்ணையால் செய்யப்பட்ட மாத்திரை களை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி
இதை ஏற்றுக் கொள்கிறது. இது போன்ற கேள்விகளைச் சிந்தித்தால் தனது
நன்மைக்காக மனிதன் அல்லாத பிற உயிரினங்களை வதைப்பதையும், கொல்வதையும்
மனிதனின் உள் மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம். போலித்
தனமாகவே, முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவே உயிர்
வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.
இஸ்லாம்
கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும்
தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.
உயிரினங்களை உணவாகக்
கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது
கழுத்தை நெறித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற
வழிகளில் பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.ஆனால் இந்த வழிமுறைகளில்
பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல் வளையில்
கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று
இஸ்லாம் கூறுகிறது.குரல்வளை மிக விரைவாக அறுக்கப் படுவதால் மூளையுடன் உள்ள
தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது.
இரத்தத்தை வெளியேற்று வதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை
சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக்
கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வை நடத்தியவர்கள்
பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம்
ஆவார்கள்.அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின்
விவரத்தையும் கீழே தருகின்றோம்.
1) முதலில் உணவுக்காக அறுக்கப் படும்
விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.
2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின்
தலையில் மூளையை தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள்
பொருத்தப்பட்டன.
3) உணர்வு திரும்பியதும் முழுவதுமாகக்குணமடைய பல
வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.
4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள்
இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.
5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.
6) பரிசோதனையின் போது
கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் ஊ.ஊ.ஏ. மற்றும் ஊ.ஈ.ஏ. பதிவு
செய்யப்பட்டன. அதாவது ஊ.ஊ.ஏ. மூளையின் நிலையையும், ஊ.ஈ.ஏ. இருதய நிலையையும்
படம் பிடித்துக் காட்டின. இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும்,
அதன் விளக்கங்களையும் காண்போம்.
இஸ்லாமிய ஹலால் முறை:
1) இம்முறையில்
விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு ஊ.ஊ.ஏ.-ல் எந்த
மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது
தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால்
துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.
2) மூன்று வினாடிகளுக்குப் பின்
அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற
நிலைக்கு ஆளாகின்றன என்பதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து
அதிகப் படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.
3) மேற்கண்ட ஆறு
வினாடிகளுக்குப் பின் ஊ.ஊ.ஏ. பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட
விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாக வில்லை என்பதை இது காட்டியது.
4)
மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு
நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும்
உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம்வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம்
உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.
முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக்
கொல்லும் முறை:
1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை
குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.
2) அப்போது விலங்குகள் மிகக்
கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது.
3) அதே நேரத்தில்
விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும்
போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம்
தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார
நிலையை அடையவில்லை.மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது
என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும்
நிரூபித்துள்ளது.எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில்
உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.சைவம் மற்றும் அசைவம்
ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும்
சிந்திக்கத்தக்கது.